×

வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருக்க துளசி வழிபாடு; லட்சுமி அருளால் பணம் பெருகுவது நிச்சயம்..!!

சிலருடைய வீட்டில் பணம் நிறைய இருக்கும் ஆனால் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்து இருக்காது. சிலரது வீட்டில் பணம் இல்லாவிட்டாலும் மகிழ்ச்சியும் நிம்மதியும் குறைவில்லாமல் இருக்கும். செல்வ வளத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ நாம் சில பரிகாரங்களை செய்ய வேண்டும்.

துளசி மூலிகை செடி மட்டுமல்ல இந்துக்களின் புனிதமான தாவரம். மகாலட்சுமி அம்சம் நிறைந்தது. பகவான் கிருஷ்ணருக்கு துளசி பிடித்தமானது. துளசியை வழிபட்டால் நமது துன்பங்களும் பொருளாதார பிரச்சினைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. வாஸ்து குறைபாடு உள்ள வீட்டில் கூட துளசியை வைத்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

துளசி மாலை கிருஷ்ணருக்கு பிடித்தமானது. எனவேதான் பெருமாள் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் துளசி மாலை கொண்டு செல்கின்றனர். அங்கு துளசி தீர்த்தம் கொடுக்கிறார்கள். துளசி தீர்த்தம் அரு மருந்தாக திகழ்கிறது. பகவான் கிருஷ்ணர் துளசி மாலை அணிந்திருப்பார். விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு. கிருஷ்ணர் நாகங்களுடன் விளையாடுபவன். ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவர் எனவேதான் கிருஷ்ணர் துளசிமாலை அணிந்து கொள்கிறார்.

வீடுகளில் துளசிமாடம் அமைப்பதன் மூலம் பூச்சிகள் நுழையாமல் தடுக்கலாம். வீட்டில் துளசிமாடம் வைத்து வழிபடுவதன் மூலம் அன்னை மகாலட்சுமியின் அருளை மட்டுமல்ல பகவான் கிருஷ்ணரின் அருளையும் பெறலாம். பகவான் கிருஷ்ணருக்கு துளசி மாலை அணிவித்து வழிபட்டால் கஷ்டங்களும் கவலைகளும் நீங்கும். பகவான் மகாவிஷ்ணு தன் மனைவி மகாலட்சுமியுடன் வைகுண்டத்திலுள்ள நந்தவனத்தில் உலா வருவார்.

அங்கு மலர் செடிகளுக்கு நடுவே ஒரு துளசி செடி இருக்கும். அவற்றைப் பார்த்துக் கொண்டே வரும் திருமால், துளசி செடி வந்ததும் அதன் அருகே நின்று கொள்வார். துளசியின் சிறப்பு பற்றி லட்சுமியிடம் எடுத்துச்சொல்வார். ‘லட்சுமி! இந்த துளசி, அமிர்தத்துக்கு நிகரானது. இதற்கு மரணம் என்பதே இல்லை. இதை நான் மிகவும் விரும்புகிறேன். எத்தனை மாலை அணிவித்தாலும், துளசிமாலை அணிவித்தால் தான் நான் மகிழ்வேன். இதை அணிந்தால் தான் எனக்கு அழகு என்று புகழ்வார்.

ஒருமுறை கிருஷ்ணரிடம் யாருக்கு அன்பு அதிகம் என்பதை, ருக்மணியும் சத்தியபாமாவும் சோதித்துப் பார்க்க விரும்பினர். மிகப்பெரிய தராசு கொண்டு வரப்பட்டது. ஒரு தட்டில் கிருஷ்ணர் அமர்ந்தார். சத்தியபாமா தன்னிடம் இருந்த நகைகள் மொத்தத்தையும் ஒரு தட்டில் வைத்தாள். ஆனால் கண்ணன் அமர்ந்திருந்த தட்டில் அசைவே இல்லை. கிலோ கணக்கில் தங்கம் வைரம் வைத்தும் கிருஷ்ணர் இருந்த தட்டு கீழே வரவில்லை.

அதே நேரத்தில் ருக்மணி, தராசின் அருகில் வந்து கிருஷ்ணரை வணங்கி ஒரு துளசி இலையில் கிருஷ்ணரின் நாமத்தை எழுதி, தராசின் நகைகள் இருந்த தட்டில் வைத்தாள். அது கிருஷ்ணனுடைய எடைக்கு சமமாக நின்றது. பக்தியுடன் அவன் நாமத்தைச் சொல்லி ஒரு துளசி இலையைச் சமர்ப்பித்தாலும் பகவான் கிருஷ்ணன் அதை ஏற்றுக் கொள்வார். ஜோதிடத்தில் துளசி செடிக்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளதோ அதே அளவு, அறிவியல் ரீதியாகவும் அதிக நன்மைகளை கொண்டது.

துளசி இலைகள் பல வகையான நோய்களுக்கும் நல்ல மருந்து. துளசி இலைகள் நோய்களை குணப்படுத்தி ஆரோக்கியத்தை அதிகரிக்கும் அருமருந்தாக திகழ்கிறது. துளசியை சாப்பிடுவதால் செரிமானத் திறன் மற்றும் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. தலைவலியை போக்கும் துாக்கமின்மையை கட்டுப்படுத்துகிறது. துளசியில் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும் பதற்றம் தணியும் மனச்சோர்வை நீக்கி மகிழ்ச்சியை அளிக்கிறது.

மகாலட்சுமி வாசம் செய்யும் துளசியை வீட்டில் வளர்த்தால் செல்வ வளம் சேருவதோடு ஆரோக்கியம் அதிகரிக்கும் துளசி செடியில் மஞ்சரி வந்தால், அது செல்வ வளத்தையும் சேர்த்து கொண்டு வரும் என்பது நம்பிக்கை. ஜோதிட சாஸ்திரப்படி துளசி செடியில் பூக்கள் அதிகமாக பூப்பது மங்களகரமானது. துளசி இலைகள் மற்றும் துளசி மஞ்சரியை விஷ்ணுவுக்கு தினமும் வைத்து வணங்கினால் நீங்கள் கடனாக கொடுத்து நீண்ட நாட்களாக உங்களுக்கு வராமல் இருந்த பணம் கைக்கு கிடைக்கும். உங்களின் வருமானம் பெருகும். உங்களுக்கு கடன் பிரச்சினை இருந்தால் நீங்கும்.

பண வருமானம் அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் துளசி மஞ்சரியை சிவப்பு நிற துணியில் கட்டி உங்கள் வீட்டின் பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் வைக்கவும். இவ்வாறு செய்வதால் மகாலட்சுமியின் அருள் என்றும் நிறைந்திருக்கும். கங்கை நீரைப்போல புனிதமானது துளசி. துளசி பூக்களை பறித்து நம்முடைய வீட்டின் வடகிழக்கு திசையில் வைத்து வழிபட்டு வந்தால் செல்வ வளம் அதிகரிக்கும்.

எதிர்மறை சக்திகள் எதுவும் நம்முடைய வீட்டில் தங்காது. பொருளாதார வளம் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமை நாளில் மகாலட்சுமி பூஜை செய்யும் போது துளசி பூக்களை பூஜைப் பொருளில் சேர்த்துக் கொள்வது மிகவும் சிறப்பானது. இதன் மூலம் மகாலட்சுமியின் அருள் நம்முடைய வீட்டில் நிரந்தரமாக தங்கும். செல்வ வளத்தோடு மகிழ்ச்சியும் நிம்மதியும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

The post வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருக்க துளசி வழிபாடு; லட்சுமி அருளால் பணம் பெருகுவது நிச்சயம்..!! appeared first on Dinakaran.

Tags : Tulsi ,Lakshmi ,
× RELATED காப்பீடு தொகையை தராமல் இழுத்தடிக்க...